Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

தமிழகத்தில் ஒரேநாளில் - 23,310 பேருக்கு கரோனா தொற்று : முதியவர்கள் உட்பட 167 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 167 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்13,671, பெண்கள் 9,639 என மொத்தம் 23,310 பேர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாகசென்னையில் 6,291, செங்கல்பட்டில் 1,755, கோவையில் 2,029,திருவள்ளூரில் 1,385, மதுரையில்914 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 72,602 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 32,917 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து28,311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 167 பேர்உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 58 பேர் இறந்துள்ளனர்.இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,779 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் வசந்தபாலனுக்கு தொற்று

ஆல்பம், வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவசந்தபாலனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

‘‘அன்புள்ள நண்பர்களுக்கு, நான் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை. என் மீது பேரன்புகொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதுக்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறுகால் கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்’’ என்று தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x