Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது :

நாடு முழுவதும் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு கடந்த டிசம்பர் 19-ம் தேதி வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது.

கடந்த பிப்ரவரியில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. தற்போது நாள்தோறும் 3.5 லட்சம் பேர் முதல் 4 லட்சம் பேருக்குவைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் புதிதாக 3.57 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,02,82,833 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,20,289 பேர் குணமடைந்துள்ளனர். 34,47,133 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,22,408 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 48,621 பேர்,கர்நாடகாவில் 44,438 பேர், உத்தரபிரதேசத்தில் 29,052 பேர், கேரளாவில் 26,011 பேர், தமிழகத்தில் 20,952 பேர், ஆந்திராவில் 18,972 பேர், டெல்லியில் 18,043 பேர், மேற்குவங்கத்தில் 17,501 பேர், ராஜஸ்தானில் 17,296 பேர், சத்தீஸ்கரில் 15,274 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த 10 மாநிலங்களில் மட்டும் 72 சதவீத தினசரி தொற்று பதிவாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி தொற்று சற்று குறைந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகாவில் கரோனா தொற்று ஏறுமுகமாக உள்ளது.

இதனிடையே ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா, சத்தீஸ்கரின் சில பகுதிகளில் ‘என்440கே’ என்ற புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரவும் கரோனா வைரஸைவிட இது 15 மடங்கு ஆபத்தானது. இந்தவைரஸ் பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x