Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

தமிழகத்தில் புதிதாக 21,228 பேருக்கு கரோனா தொற்று : ஒரே நாளில் முதியவர்கள் உட்பட 144 பேர் உயிரிழப்பு

சென்னை

தமிழகத்தில் புதிதாக 21,228 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்12,450, பெண்கள் 8,778 என மொத்தம் 21,228 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 34 பேருக்கு தொற்றுஉறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,228, செங்கல்பட்டில் 1,608, கோவையில் 1,509, திருவள்ளூரில் 1,152, மதுரையில் 787, திருநெல்வேலியில் 719 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 49,292 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 3 லட்சத்து 20,457 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 9,450 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 5,840 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 19,112பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னையில் 33,222 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 25,230 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார்மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 144 பேர்உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 36 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14,612 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,894 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 3 லட்சத்து 58,573,செங்கல்பட்டில் 86,265, கோவையில் 84,206, திருவள்ளூரில் 63,618என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 266 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 32 லட்சத்து 38,475 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 40,512 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் டிஜிபி ஜே.கே.திரிபாதி, சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், பொது சுகாதாரம், நோய்தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் பல்வேறு துறைசெயலர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, தலைமைச் செயலர் தலைமையிலான குழுவினர் தமிழகமுதல்வராக பொறுப்பேற்க உள்ளதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x