Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் - முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு : உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் தீவிரத்தை குறைத்து, பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை அமைந்தகரையை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜிராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் கரோனா தடுப்பூசிகள் 90 சதவீத மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள், மத்திய அரசுக்கு ரூ.150-க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400-க்கும்,மக்களுக்கு ரூ.600-க்கும் விற்கப்படுகிறது. 135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 முதல் 5 சதவீத மக்களுக்கே இந்த தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகிறது.

மருத்துவர் நியமனம்

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப்பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும்.

செங்கல்பட்டில் 100 ஏக்கர் பரப்பில் மத்திய அரசால் 2012-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்துக்கு ஏற்கெனவே ரூ.900 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த ஆலையில் உடனே தடுப்பூசி உற்பத்தியை தொடங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

தற்போதைய சூழலில் கரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை முழுமையாகநிறுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

விடுமுறை கால நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x