Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

ஐம்பொன் சிலை எனக் கூறி சாமி சிலையை ரூ.1 கோடிக்கு விற்க முயன்றவர் கைது :

வெள்ளகோவிலில் ஐம்பொன் சிலை எனக் கூறி, ரூ.1 கோடிக்கு சாமி சிலையை விற்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மாந்தபுரத்தைச் சேர்ந்தவர்ரமேஷ் (37). முதுகலை பட்டதாரி. வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 8 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஓராண்டாக பணிக்கு செல்லவில்லை. ஓராண்டுக்கு முன்பு கோவை பகுதியில் முக்கால் அடி உயரத்தில் 2 கிலோ எடை கொண்ட சிலையை ரூ.4 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். இந்த சிலையை வைத்துக்கொண்டு, இதற்காக பலரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பழமையான ஐம்பொன் சிலை இருப்பதாகவும், ரூ.1 கோடி வரை விலை பேரம் பேசியதாகவும் தெரிகிறது. இந்நிலையில், வெள்ளகோவில் அருகே நாட்ராயன் கோயில் பகுதிக்கு ரமேஷ் நேற்று சிலையுடன் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கோயில் அருகே ரமேஷை சிலையுடன் போலீஸார் பிடித்தனர். சிலையை பறிமுதல் செய்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.

இதில், ஐம்பொன் சிலை எனக் கூறி ரூ.4 லட்சத்துக்கு வாங்கி ரூ.1 கோடி வரை பலரிடம் பேரம் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து, ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்டது ஐம்பொன் சிலையா என தெரியவில்லை. ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.வெள்ளகோவிலில் மீட்கப் பட்ட சிலை.ரமேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x