Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தெற்கு போக்குவரத்து காவல் சரகத்துக்குரிய கட்டுப்பாட்டு அறை மற்றும் சோதனைச்சாவடி முன்பு, கடந்த 27-ம் தேதி தெற்கு போக்குவரத்துக்கு காவல் ஆய்வாளரின் வாகனத்தை மாநகர ஆயுதப்படை காவலரும், ஓட்டுநருமான ராஜகுரு (34) நிறுத்தி இருந்தார். இந்நிலையில், திடீரென அங்கிருந்து வாகனம் மாயமானது. ஊத்துக்குளி எஸ்.பெரியபாளையம் தாமரைக்கோயில் அருகே வெள்ளியம்பாளையத்தில், திருப்பூர்- ஊத்துக்குளி நோக்கி சென்ற காவல் ஜீப் திருப்பூர் நோக்கி வந்த லாரி மீது மோதியது. மது போதையில் காவல் வாகனத்தை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் (23) என்பவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது. விபத்தில் காயமடைந்த அவர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பணியில் அலட்சியமாக இருந்ததாக காவல் ஜீப் ஓட்டுநரான ராஜகுருவை பணியிடை நீக்கம் செய்து, திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT