Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதைக் கண்காணிக்க, 100 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை கோயம்பேடு சந்தையில் பணிபுரியும் வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் என்பன உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்கவும் வியாபாரிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க தற்காலிகப் பணியாளர்களாக 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் மற்றும் கூலித் தொழிலாளிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், அனைத்துக் கடைகளிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு செய்து வருகிறோம்.
இச்சூழலில், சிஎம்டிஏ நிர்வாகம் சார்பில் தற்காலிக பணியாளர்களாக 100 பேர் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 8 மணி நேரம் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், வியாபாரிகள் மற்றும் கூலித் தொழிலாளிகள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதைக் கண்காணித்து உறுதி செய்வார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT