Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

நீண்டகால கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றுமா? : காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் உத்திரமேரூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில், திமுகவெற்றி பெற்றுள்ள நிலையில், இங்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கு புதிய அரசு தீர்வுகாண வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த் துள்ளனர்.

தேசிய அளவில் புகழ்பெற்றவை காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள். இங்கு உற்பத்தியாகும் பட்டுச் சேலைகளை தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், பட்டுச் சேலைகளை நெய்யும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. காஞ்சிபுரம் பகுதியில் கடந்த 2012-ல் ரூ.83 கோடி மதிப்பில் அமைப்பதாக அறிவிக்கப்பட்ட பட்டுப் பூங்கா திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்வதற்கான தறிக் கூடங்கள், பட்டு நூலை சாயமிடத் தேவையான சாய ஆலைகள், வடிவமைப்பு மையம், பரிசோதனைக் கூடம், பயிற்சி மையம், மருந்தகம், பொது வசதி மையம், விற்பனை நிலையங்கள் ஆகிய பல்வேறு வசதிகளுடன் பட்டுப் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இந்த பட்டுப் பூங்கா செயல்படத் தொடங்கினால், பட்டு நெசவாளர்கள், மற்றும் அந்த தொழிலைச் சார்ந்து இருப்பவர்களின் வாழ்க்கைத் தரம்உயரும். எனவே, இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியறுத்தி யுள்ளனர்.

உத்திரமேரூர் ஏரி

உத்திரமேரூர் ஏரி காஞ்சிபுரம்மாவட்டத்தில் உள்ள மிகப்பெரியஏரிகளில் ஒன்றாகும். உத்திரமேரூரை சுற்றியுள்ளகிராமங்களின் விவசாயத்துக்கு இந்த ஏரியே நீர்ப்பாசன ஆதாரமாகும். இந்த ஏரிக் கால்வாய்கள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில்கூட இந்த ஏரிக்கு போதிய அளவுக்கு தண்ணீர் வரத்து இல்லை.

எனவே, ஏரிக் கால்வாய்களைத் தூர்வாருவதுடன், செய்யாற்றில் கட்டப்படும் தடுப்பணைகளில் இருந்து, இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாலாஜாபாத் அடுத்துள்ள திருமுக்கூடல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான கல் குவாரிகள், விதிகளை மீறிச் செயல்படுகின்றன. இதனால்விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், கல் குவாரிகளுக்கு அதிவேகத்தில் செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, உரிய விதிகளைப் பின்பற்றி, கல்குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றுஇப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். புதிதாகப் பொறுப்பேற்கும் திமுக அரசு, பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x