Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

105 ஏக்கர் அரசு நிலத்தை - தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு நிலம் 105 ஏக்கரை தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்த அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ப்ரவீண்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘செங்கல்பட்டு அருகே கருங்குழிபள்ளம் கிராமத்தில் உள்ள 105 ஏக்கர் அரசு நிலம் 53 தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிலஅபகரிப்பு பிரிவில் புகார் அளித்தோம். அந்த புகாரை அவர்கள் விசாரிக்காமல், திருப்போரூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்ததில் சில அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. எனவே, எனது புகார் குறித்து நிலஅபகரிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிநபர்களுக்கு தவறாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசுக்கு சொந்தமான 105 ஏக்கர் நிலத்தை தனி நபர்களுக்கு தவறுதலாக பட்டா போட்டு கொடுத்துள்ளதாக அரசு தரப்பில் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தெந்த அதிகாரிகள் தவறு செய்தார்களோ அவர்கள் மீது உடனடியாக துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பட்டாக்களை யும் ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x