Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கரோனா பரவல், கட்டுப்பாடுகளால் ஈரோடு ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் பாதிப்பு :

வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழியும் ஈரோடு ஜவுளிச்சந்தை, கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகளால் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஈரோடு

கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகளால் ஈரோட்டில் நேற்று நடந்த ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஈரோடு ஜவுளிச் சந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகளால் ஜவுளி வர்த்தகம் இரண்டு மாதங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகளால் முடங்கியுள்ளது. நேற்று நடந்த ஜவுளிச் சந்தையில் வெளிமாவட்ட, வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாததால், மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடந்தது.

ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்த சிறுவியாபாரிகளால் சில்லரை வியாபாரம் மட்டும் 25 சதவீதம் நடந்ததாக ஜவுளிச் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 6-ம் தேதி முதல், கரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதால், தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜவுளிச்சந்தை வியாபாரிகள் கூறும்போது, ‘கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகளால் ஜவுளி வர்த்தகம் முடங்கியுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இயல்பு நிலை திரும்பினால்தான், மொத்த வியாபாரம் மீண்டும் அதிகரிக்கும்', என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x