Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி மற்றும் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் கீதா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சித்திரை மாதத்தில் பெய்யும் கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு செய்வதால் நிலத்தின் கடினமான மேற்பரப்பு உடைக்கப்பட்டு துகள்களாகும். இதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைந்து, மண்ணில் காற்றோட்டமும், நுண் உயிரிகளும் அதிகரிக்கும். மேலும் மழைநீரை மண்ணுள் நிறுத்த உதவும். முந்தைய பயிர் தூர்களையும், களைகளையும் உழுது காயவிடுவதால் அவற்றை அழிக்க முடியும். மடக்கி உழுவதால் அங்ககச்சத்து அதிகரிக்கும். மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரித்து மண்வளம் மேம்படும்.
அடுத்து வரும் பயிரின் பருவ விதைப்புக்கு நிலத்தை பக்குவப்படுத்தி, பயிரை தாக்கும் படைப்புழுக்கள் மற்றும் இதர பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் மற்றும் முட்டைகளை வெளிக்கொணர்ந்து சூரியஒளியாலும், பறவைகள் உண்பதாலும் அழிக்க முடியும். மழைநீர் வழிந்தோடி வீணாவதை தடுக்கவும், சரிவுகளின் குறுக்கே ஆழசால் அகல பாத்தி அமைத்து மண்ணின் ஈரப்பத்தை பாதுகாக்கவும் கோடை உழவு அவசியம்.
கோடை உழவு செய்வதால் மானாவாரி மக்காச்சோளப் பயிரில் முக்கியமாக படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கோடை உழவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT