Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

தஞ்சாவூரில் மருத்துவரை தாக்கிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை, தாக்கியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மேலவண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராகவன்(27). இவரது நண்பர் ஒரத்தநாடு அருகே உள்ள பொட்டலங்குடிக்காட்டை சேர்ந்தவர் நடராஜன் மகன் மாதேஸ்வரன்(18). இவர்கள் இருவரும், ஏப்.9-ம் தேதி இரவு ஒரத்தநாடு சென்று விட்டு, தஞ்சாவூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

தஞ்சாவூர் தொல்லிகாப்பியர் சதுக்கம் பகுதியில் வந்தபோது, இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் ராகவன், மாதேஸ்வரன் இருவரும் காயமடைந்தனர். அவர்களை, சக நண்பர்களான வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த எம்.ராகவன் (26), சைதம்பாள்புரம் ஆர்.ராமச்சந்திரன் (22) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் அருண்பாண்டியன், காயமடைந்தவர்களிடம் விபத்து எப்படி நடந்தது, உடலில் எங்கு வலி உள்ளது எனக் கேட்டுள்ளார்.

அப்போது மாதேஸ்வரன், ஆர்.ராகவன், எம்.ராகவன், ராமச்சந்திரன் ஆகியோர் அருண்பாண்டியனிடம் தகராறு செய்து, அவரை தாக்கினர். இதுதொடர்பாக, மருத்துவர் அளித்த புகாரின்பேரில், மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாதேஸ்வரன், ஆர்.ராகவன், எம்.ராகவன், ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த பரிந்துரையின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் உத்தரவின்படி நேற்று முன்தினம் நான்கு பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x