Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
கோவில்பட்டி அருகே கடலையூர் பகுதி தோட்டங்களில் கறிவேப்பிலை கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கன்றுகள் வரை நட்டு வளர்க்கின்றனர். இப்பகுதியில் தோட்டப்பாசனத்தில் வளர்க்கப்படும் கறிவேப்பிலை செடிகள், நடப்பட்ட 6 மாதங்களில் இருந்து ஒரு ஆண்டுக்குள் பலன் தருகின்றன. சுமார் 5 ஏக்கர் அளவில் கறிவேப்பிலை கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து கடலையூர் அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்த விவசாயி நல்லசாமி கூறும்போது, “கறிவேப்பிலை கன்றுகளை கொடை ரோட்டில் இருந்து வாங்கி வருகிறோம். ஒரு கன்று ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. நிலத்தின் தன்மையை பொறுத்து ஒரு ஏக்கருக்கு 6 ஆயிரம் கன்றுகள் வரை நட்டு வளர்க்கலாம்.
மற்ற பயிர்களைப் போலவே அடியுரம், மேல் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் தெளிக்க வேண்டும். கறிவேப்பிலைக்கு ஏற்ற பருவம் என்றால் தை முதல் புரட்டாசி மாதம் வரை தான். புரட்டாசியில் இருந்து மழை பெய்ய தொடங்கினால் இலைகள் சரிவர வராது. மேலும், அடுத்து வரும் மார்கழியில் பனித்துளிகள் விழுந்தால் கறிவேப்பிலை இலையில் வெள்ளை பொட்டு விழுந்துவிடும். இதற்கு மருந்து தெளிப்பது போல் ஸ்பிரே மூலம் தண்ணீரை தெளிப்போம்.
அதேபோல், கோடை காலத்தில் ஓரிரு முறை மழை பெய்தால் கறிவேப்பிலை நன்றாக வளரும். அப்படி இல்லாதபட்சத்தில் காலை, மாலை வேளைகளில் தண்ணீர் விடுவோம். ஆண்டுக்கு நான்கு முறை அறுப்பு (அறுவடை) செய்வோம். இதில், ஒரு ஏக்கருக்கு 25 குவிண்டால் வரை கிடைக்கும். தற்போது ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரம் வரை விலை போகிறது. ஒரு குழந்தையை போன்று கறிவேப்பிலையை பார்த்துக்கொண்டால், நன்றாக பலன் கொடுக்கும்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT