Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

நாட்றாம்பள்ளியில் - 2 தேநீர் கடைகளுக்கு ‘சீல்’ :

நாட்றாம்பள்ளியில் கரோனா விதிமீறிய 2 தேநீர் கடைகளுக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்' வைத்து அபராதம் விதித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வெளியிட்ட கரோனா விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

இருந்தாலும், கரோனா விதிமுறைகளை திருப்பத்தூர் மாவட்டத்தில் கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கரோனா தொற்று குறையாமல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து வந்தனர். இதைத் தடுக்க ஒவ்வொரு வட்டத்திலும் அந்த வட்டாட்சியர்கள் தினசரி ஆய்வு மேற்கொண்டு கரோனா விதிமீறலில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் சுமதி தலைமை யிலான வருவாய்த் துறையினர் நாட்றாம்பள்ளி பேருந்து நிலையம், பச்சூர், ஏரிக்கோடி உள்ளிட்டபகுதிகளில் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது, நாட்றாம்பள்ளி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த 2 தேநீர் கடைகளில் அதிக அளவில் ஆட்களை நிறுத்தி, கண்ணாடி டம்ளரில் தேநீர் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

இதையடுத்து, கரோனா விதிமீறலில் ஈடுபட்ட 2 தேநீர் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்த வருவாய்த் துறையினர் 2 கடைகளுக்கும் ‘சீல்' வைத்தனர். இதைத்தொடர்ந்து, நாட்றாம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்த 20 பேர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது. மே 6-ம் தேதி (நாளை) முதல் அனைத்து கடைகளும் மூட வேண்டும். மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் காலை முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். வார இறுதி நாட்களில் இறைச்சி, மீன் விற்பனை கடைகள் மூடியிருக்க வேண்டும். கரோனா புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

புதிய கட்டுபாட்டுகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண் டும் என வருவாய்த் துறையினர் எச்சரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x