Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

கிணத்துக்கடவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக - நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக :

கிணத்துக்கடவு தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் திமுக 4 முறையும், அதிமுக 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அ.சண்முகம் 89,042 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் 87,710 வாக்குகள் பெற்று, 1,332 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டார். இந்தமுறை திமுக சார்பில் குறிச்சி பிரபாகரனுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் போட்டியிட்டார். உட்கட்சி பூசலால் கடந்தமுறை கைவசமாகாத வெற்றியை இந்தமுறை வசப்படுத்தியே ஆக வேண்டும் என திமுகவினரும், அதிகமுறை வென்ற தொகுதியை விட்டுக் கொடுக்காமல் மீண்டும் தக்கவைக்கும் முனைப்பில் அதிமுகவினரும் தீவிரம் காட்டினர். தேர்தல் முடிவின் இறுதியில் செ.தாமோதரன் 1,01,537 வாக்குகளும், குறிச்சி பிரபாகரன் 1,00,442 வாக்குகளும் பெற்றனர். 1,095 வாக்குகள் வித்தியாசத்தில் தாமோதரன் வெற்றி பெற்றார். இதன்மூலம் 2001 முதல் 2016 வரை தொடர்ந்து 3 முறையும், தற்போதும் என மொத்தம் 4 முறை செ.தாமோதரன் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x