Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனியப்பன் டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான பழனியப்பன் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை நாளன்று வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இறுதிச் சுற்று முடிவில் அவர் 15 ஆயிரத்து 863 வாக்குகள் பெற்றுள்ளார். ஒரு தொகுதியில் பதிவாகும் செல்லத்தக்க வாக்குகளின் எண்ணிக்கையில் 6-இல் ஒரு பங்கு வாக்குகள் இருந்தால் மட்டுமே டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பதிவான செல்லத்தக்க மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 20ஆயிரத்து 994 ஆகும். அதில் 6-ல் ஒரு பங்கு வாக்கை கணக்கிட்டால் 36 ஆயிரத்து 832 வாக்குகள் வருகிறது.
இந்த அளவு வாக்கு பெற்றிருந்தால் மட்டுமே வேட்பாளர் தனது டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து திரும்பப் பெற முடியும். அதற்கு குறைவான வாக்குகள் பெற்ற நிலையில், முன்னாள் அமைச்சரும், அமமுக வேட்பாளருமான பழனியப்பன் தனது டெபாசிட் தொகையை இழந்துள்ளார். அவரைப் போலவே, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களின் டெபாசிட் தொகைகளை இழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT