Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை கோயம்பேட்டில் எளிய முறையில் வணிகர் தின மாநாடு நாளை நடைபெற உள்ளது. கடைகளுக்கு விடுமுறை விடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இப்பேரமைப்பு சார்பில் மே 5-ம் தேதி வணிகர் தினத்தை, அகில இந்திய வணிகர் பேரிடர் விடியல் மாநாடாக சென்னையில் நடத்த தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
கரோனா 2-வது அலை காரணமாக எளிய முறையில் 5-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு சென்னை கே.கே.நகர் ராமசாமி தெருவில் வணிக கொடியேற்றும் நிகழ்ச்சியும், அன்று மாலை 4 மணிக்கு கோயம்பேடு வணிக வளாகம் அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதில் நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட உள்ளன.
ஆண்டுதோறும் மே 5-ம் தேதி கடைகளுக்கு விடுமுறை அளித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கடைகளுக்கு விடுமுறை அளிக்காமல், மாலையில் அரசு வழிகாட்டுதலோடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT