Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

அரசு ஆலோசகர் பதவி கே.சண்முகம் விலகல் : தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பினார்

சென்னை

தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் தலைமைச் செயலர் கே.சண்முகம், அப்பதவியில் இருந்து விலகுவதாக, தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக அரசின் நிதித்துறை செயலராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்த கே.சண்முகம், தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுக்குப்பின், தமிழக தலைமைச் செயலராக கடந்த 2019-ம் ஆண்டுஜூலை 29-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

அவரது பதவிக்காலம் கடந்த 2020 ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கரோனா தடுப்பு பணிகள் காரணமாக 2 முறை தலா 3 மாதங்கள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதியுடன் பதவிக்காலம் முடிந்தது.

இதையடுத்து, புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார். அதேநேரம், ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் கே.சண்முகத்துக்கு அரசு ஆலோசகர் பதவி ஓராண்டுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. தொடர்ந்து, அரசு ஆலோசகர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக, தலைமைச்செயலர், சட்டத்துறை செயலர் ஆகியோருக்கு சண்முகம் நேற்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x