Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
புதுச்சேரியில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில் ஒரு எம்எல்ஏவை மட்டுமே பெற்றிருந்த பாஜக 20 ஆண்டுகளுக்குப் பிறகு 6 தொகுதிகளை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 9 இடங்களில் போட்டியிட்டது. கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி ஊசுடு தொகுதியில் மட்டுமே டெபாசிட் வாங்கியது. மற்ற இடங்களில் டெபாசிட் இழந்தது.
ஆனால், அதன்பிறகு பாஜக தனது வியூகத்தின் மூலம் மத்திய அரசின் தனது அதிகாரத்தினை பயன்படுத்தி உள்துறை மூலம் பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்து சட்டப்பேரவைக்குள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நுழைந்தது.
அதன்பிறகு புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டிய பாஜக என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைந்து நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.
இதன் மூலம் 2001-ம் ஆண்டு பாஜக எம்எல்ஏவாக கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்கின்றனர். இதனால் புதுச்சேரியில் பாஜக 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT