Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

இந்தியா வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி :

மாஸ்கோவிலிருந்து தனி விமானம் மூலம் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி நேற்று ஹைதராபாத் வந்து சேர்ந்தது.

நாட்டில் தற்போது கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய 2 கரோனா தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தஇரு தடுப்பூசிகளை தவிர, தற்போது 3வது கரோனா தடுப்பூசி ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று ஹைதராபாத் வந்திறங்கியது. இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல்கட்டமாக 1.5 லட்சம் தடுப்பூசி பாட்டில்கள் வந்துள்ளன. ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள மருந்தை 10 பேருக்கு தடுப்பூசியாக போடலாம். அதன்படி 15 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசியை வழங்க முடியும்.

டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தார்இந்த மருந்துக்கான இறக்குமதிக்கும், இந்தியாவிலேயே இதனை தயாரிப்பதற்கும் அனுமதியை பெற்று தற்போது ரஷ்யாவிலிருந்து வரவழைத்துள்ளனர். இதனை சோதனை செய்து, பல மாநில மக்களுக்கு சோதனை அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்படும்.அதன் பின்னர், நாட்டின் மத்தியமருந்து கட்டுப்பாட்டு ஆய்வு மையம் இதை செலுத்த அனுமதி வழங்கியபின்னர், இந்த 3-ம் ரக கரோனா தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

முதலில் ஜூன் மாதம் 5 மில்லியன், அடுத்ததாக ஜூலையில் மேலும் 10 மில்லியன் தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து வர உள்ளன.

தற்போதைய சூழ்நிலையில், 18 வயது நிரம்பிய 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட போதிய தடுப்பூசிகள் நிலுவையில் இல்லை. இந்நிலையில், கரோனா தொற்று நாளுக்கு அதிகரித்து வருகிறது.

இதற்கு கரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பது ஒன்றே வழியாகும் அல்லது புதிய தரமான தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த நேரத்தில் 3-வது தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி வந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்ததடுப்பூசியின் மீதான அனைத்துசோதனைகளையும் முடித்துக்கொண்டு அடுத்த மாதம் முதல் மக்கள் உபயோகப்படுத்தும் ஒரு கரோனா தடுப்பூசியாக இது வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x