Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM
மிகுந்த கட்டுப்பாட்டுடன் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்த வேண்டும். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றம் கூறியுள்ள அறிவுரைகளை அதிமுக தொண்டர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக தொண்டர்கள், கட்சி மீது பேரன்பு கொண்ட நல்லோர், மே 2-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படும்போதும், முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்திலும் பேரறிஞர்அண்ணா வழியில் அமைதியுடனும், எம்ஜிஆர் வழியில் விழிப்புடனும், ஜெயலலிதா வழியில் ஆற்றலுடனும் நடந்துகொள்ள வேண்டும். கரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவரும் சூழலில், அனைவரும் பத்திரமாகவும், பாதுகாப்புடனும் செயல்படுவது இன்றியமையாதது.
வாக்கு எண்ணிக்கையின்போதும், முடிவுகள் வெளியாகும் வேளையிலும் அரசியல் கட்சியினர், போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கண்ணியம், கட்டுப்பாடுகள், கடமை உணர்வுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும் தொண்டர்கள் ஒரு நொடியும் நெறிகளை மீறிவிடக் கூடாது.
வாக்கு எண்ணும் இடங்களுக்கு யார், யார் செல்ல வேண்டும்,முழு ஊரடங்கு நாள் என்பதால் அதை எப்படி முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பதுகுறித்து தேர்தல் ஆணையம்வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
மக்கள் நலன் கருதி அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்து, அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை ஏற்று கட்டுப்பாட்டுடனும், வெற்றிக் கொண்டாட்டங்களை மிக, மிக அவசியமான நெறிகளுக்கு உட்பட்டும், அடக்கத்துடனும் நடத்த வேண்டும். பட்டாசு வெடிப்பது, வெற்றி ஊர்வலம் செல்வது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.
நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் கூறியுள்ள அனைத்து அறிவுரைகளையும் அதிமுக தொண்டர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT