Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

புதிய அரசுக்கு சவால்கள் காத்திருக்கின்றன : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்கவிருக்கும் அரசுக்கு பெரும் சவால்கள் காத்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மக்களின் எண்ணப்படியே கருத்துக் கணிப்புகள் உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்களுக்கு நன்றி. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. தமிழகத்தில் திமுக கூட்டணியில் கூட்டணி அமைச்சரவை என்ற கேள்வியே எழவில்லை.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டன. இதில் மத்திய அரசுக்கு பெரும் பங்குள்ளது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்கள். ஆனால், தற்போது தடுப்பூசி இல்லை. தடுப்பூசி இல்லாமல் தடுப்பூசி இயக்கம் எப்படி நடத்த முடியும். மேலும் காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளைத் தான் தற்போது உச்ச நீதிமன்றமும் எழுப்பி உள்ளது.

தடுப்பூசி திருவிழா என்பது ஒரு மோசடி. பெருந்தொற்று என்பது திருவிழாவா? அது ஒரு துயரம், சோக நாள்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தால், ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகளுக்கும், புதிதாக பொறுப்பேற்கும் அரசுகளுக்கும் பெரும் சவால்கள் உள்ளன. தற்போதைய தமிழக அரசு பெரும் கடன் சுமையையும், பெரும் தொற்று எனும் சவாலையும் வைத்து விட்டு செல்கிறது. முழு ஊரடங்கை மக்கள் வரவேற்க மாட்டார்கள். அது மீண்டும் வரக் கூடாது. நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க சில வழிகள் உள்ளன. ஆனால் மாநில அரசுக்கு கடன் வாங்குவது என்ற ஒரே வழி தான் உள்ளது. அதனால் பெருந்தொற்றைச் சமாளிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x