Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

யானைகள் வழித்தடமான கோவை தடாகம் பகுதியில் - உரிமம் இன்றி செயல்படும் செங்கல்சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு :

யானைகள் வழித்தடமான கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இருந்த செங்கல்சூளைகளை மூட, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்படி வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் செங்கல் சூளைஉரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா விசாரித்தார். அப்போது, மனுதாரர்கள் தரப்பில் தமிழ்நாடு கனிம வளமுறைப்படுத்துதல் சட்டப்படி, செங்கல் சூளைகளை மூடும்படி உத்தரவிட மாவட்ட ஆட்சியருக்குமட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், வட்டாட்சியருக்கு அதிகாரமில்லை என்றும், உரிமங்களை புதுப்பிக்க உரிய கட்டணம் செலுத்தியுள்ளபோதும் அவற்றை அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது மூட உத்தரவிட்டுள்ளதாக வாதிடப்பட்டது. ஆனால், தமிழகஅரசு தரப்பில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியரின்அறிவுறுத்தலின்படியே செங்கல்சூளைகளை மூட வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும், இதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் வாதிடப்பட்டது.

மேலும் உரிமங்களை புதுப்பிக்க கட்டணம் செலுத்தியுள்ளதால், உரிமம் இல்லாமல் செங்கல் சூளைகளை நடத்துவதற்கு மனுதாரர்கள் உரிமை கோர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு கனிம வள முறைப்படுத்துதல் சட்டப்படி, செங்கல் சூளைகளை மூடும்படி உத்தரவிட மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் கூறி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேநேரம், சட்டப்படி அதிகாரம் படைத்த மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட செங்கல் சூளைகளின் உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பளித்து, 4 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும், உரிமம் இல்லாத செங்கல் சூளைகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x