Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
கோவை மருத்துவமனைகளில், தீ பாதுகாப்பு மற்றும் ஆக்சிஜனை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சமீபத்தில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஆக்சிஜன் டேங்க்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்தனர். அதேபோல், விஜயவாடாவில் கரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், 11 பேர் உயிரிழந்தனர்.
இப்படி நெருக்கடியான நேரத்தில் தீ விபத்துகளும், ஆக்சிஜனை கையாள்வதில் ஏற்படும் தவறுகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், அத்தகைய சூழல் கோவையில் ஏற்படுவதை தடுக்கும் வகையில், கோவை மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஆக்சிஜனை கையாள்வது எப்படி, தீ தடுப்பு பணிகளை முறையாக மேற்கொள்வது எப்படி, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்து தீயணைப்புத்துறையினரால் விளக்கப்பட்டன.
மாவட்ட தீயணைப்புத்துறை யினர் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில், 38 கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகள் உள்ளன. இவற்றில் தீதடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படுகின்றன. ஆக்சிஜன் சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டால், அதை கையாள்வது குறித்தும் தெளிவுபடுத்தப்படுகிறது. தொடர்ந்து இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு மருத்துவ மனைகளில் நடத்தப்படும்,’’ என்றனர்.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை துணை இயக்குனர் சத்யநாராயன், மாவட்ட அலுவலர் ஜெகதீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோவை உட்பட நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தமருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT