Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிகாரிகள் - பணப் பலன்களை தடையின்றி பெறுவது வேதனைக்குரியது : சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்யநாதன் கருத்து

திறமையான பலர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைத்து பணப் பலன்களையும் தடையின்றி பெறுவது வேதனைக்குரியது என உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

கடலூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய ஆரோக்கியசாமி என்பவர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தொடர்ந்த வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆரோக்கியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆரோக்கியசாமியை பணிநீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆரோக்கியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

துறைரீதியாக நடவடிக்கை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்யநாதன் பிறப்பித்த உத்தரவில், “குற்றம் சாட்டப்பட்டவரின் தண்டனை, உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டதை, வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக கருத முடியாது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள், நீதிமன்ற தண்டனைகளில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே துறை ரீதியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தகுதியான ஊழியர்கள்

தகுதியான, திறமையான பலர் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்களாக குறைந்தஊதியத்தில் பணியாற்றி வரும்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைத்து பணப் பலன்களையும் தடையின்றி பெறுவது வேதனைக்குரியது. எனவே இந்த மனு ஏற்புடையதல்ல” என்று கூறி வழக்கைதள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x