Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

கரோனா தொற்றை தடுக்க - இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்தலாம் : புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்

கரோனா தொற்றை தடுக்க யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை மக்கள் பயன்படுத்தலாம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் தாராள மனதோடு அரசுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்று அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் முகக்கவசம், கிருமிநாசினி, வெண்டிலேட்டர், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சுகாதாரத் துறைக்கு வழங்கி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நேற்றுபுதுச்சேரி ராஜ்நிவாஸில் ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில், விழுப்புரம் தனியார் கல்விக் குழுமம் 10,000 கிருமிநாசினி புட்டிகளை சுகாதாரத் துறைக்கு வழங்கியது.

மேலும் புதுச்சேரி சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும்ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 25 கிலோ கபசுர குடிநீர் சூரணம், 36 லிட்டர் கிருமிநாசினி மற்றும் 25 அடைப்புகள் கபசுர குடிநீர் கசாயம் வழங்கியது. சுகாதாரத் துறைச் செயலர் அருண் அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி, ஏ.பி. மகேஸ்வரி , மாநில சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் ராமலு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘அரசுக்கு உதவ முன்வந்த நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல மேலும் நிறுவனங்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

மருத்துவக் குழுக்கள் வீடு வீடாகச் சென்று சிகிச்சை அளிப்பது தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.500 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளைய (இன்று) தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அரசியல் கட்சியினரும், பொது மக்களும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தொற்றுக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் ஆயுஷ்நிறுவனம் கரோனா பாதிப்பைத் தடுக்க இயற்கை மருந்துகளை பரிந்துரை செய்து வருகிறது. அரசு மூலமாக ஒப்புதல் அளித்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும், சில இயற்கை மருத்துவர்கள், இந்திய மருத்துவ முறையில் தனியாக மருத்துவமனை அமைத்து கரோனோ ேநாயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஒன்றிரண்டு மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க அரசுமுடிவு செய்திருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் கரோனா தடுப்பு முறைகளாக யோகா, இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்தலாம். ரெம்டெசிவிர் மருந்து எல்லோருக்கும் தேவைப்படாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். மருத்துவர்களும், தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும்.

இந்தியா முழுவதும் கரோனாதொற்று அதிகரித்து வருகிறது. மக்கள் தனிமனித இடைவெளியோடு பழக வேண்டும். கரோனா நடைமுறைகளைப்பின்பற்ற வேண்டும். இளைஞர்கள் அதற்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். ரெம்டெசிவிர், மருந்துகள், ஆக்ஸிஜன் ஆகியவை போதிய அளவு இருப்பு இருக்கிறது. ஆகவே மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.’’ இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x