Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

பரமக்குடி அருகே - மூதாட்டி கொலை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது :

பரமக்குடி

பரமக்குடி அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் திருடப்பட்டது தொடர்பாக பெண் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி காளிமுத்தம்மாள் (92) நேற்று முன்தினம் அவரது தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் அறையில் கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 12 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து மூதாட்டியின் மகன் சண்முகம் அளித்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், மூதாட்டியின் தென்னந்தோப்பில் அவ்வப்போது வேலை செய்யும் சத்திரக்குடி அருகே மாவிலங்கையைச் சேர்ந்த வடிவேல் (34), இவருக்கு பழக்கமான அரியனேந்தல் காலனியை சேர்ந்த அழகர்சாமி மனைவி முத்துராக்கு (27) ஆகிய இருவரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து, நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு காளிமுத்தம்மாள், வடிவேலை திட்டி இனிமேல் தென்னந்தோப்புக்கு வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மூதாட்டியை கொலை செய்ததாக வடிவேலு, போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வடிவேல் மற்றும் முத்துராக்கை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x