Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை விரைந்து தொடங்க வலியுறுத்தல் :

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள் சங்கம், மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம், இந்து வணிகர் சங்கம், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தியாகராஜன், கல்லை ஜிந்தா, கணேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த சூழ்நிலையில் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சார இணைப்பு வழங்கி, ஆக்சிஜன் தயாரிப்பதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை தொடங்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்திக்காக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x