Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமாக செயல்படுவதாக தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர்தமிழிசை நேற்று ஜிப்மர் மருத்துவமனையை பார்வையிட்டு மருத்துவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளோடு கலந்துரையாடினார்.
அப்போது ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மருத்துவ வசதிகளை விரிவாக எடுத்துரைத்த இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால், மருத்துவமனையில் 11கிலோ லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் நிறுவப்பட்டு இருப்பதாகவும், அதனை 20 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாற்றநடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி, ஏ.பி. மகேஸ்வரி, சுகாதாரத்துறைச் செயலர் அருண், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜிப்மர் மருத்துவமனை மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. ஆனால் அதுஇன்னும் விரிவுப்படுத்தப்பட வேண்டும். ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளை அதிகப்படுத்தவும், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
அதேபோல் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் சவால்கள் பற்றியும் கூறிஇருக்கிறார்கள். இதுதொடர்பாக அறிக்கை தருவதாகவும் சொல்லிஇருக்கிறார்கள்.
ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு நடைபெறவில்லை எனபொதுமக்களுக்கு சங்கடம் இருந்தது. கரோனா தொற்றை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் பல மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது.
அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று புறநோயாளிகள் பிரிவுக்கு மக்கள் சாதாரணநோயுடன் வந்து கரோனா தொற்றுக்கு ஆளாகிவிடக்கூடாது. மற்றொன்று புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களில் கரோனா தொற்றுடையவர்கள் யாரேனும் இருந்தால் மருத்துவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுவிடுகின்றனர்.
இங்கு கூட 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருகின்றனர். ஒவ்வொரு நாளும்மருத்துவர்கள் பாதிக்கப்படும்போதும், அவர்கள் 15 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்படும் போதும் மருத்துவர்கள் இல்லாத சூழல் ஏற்படுகிறது. ஆகவே இங்குபடுக்கை மட்டுமின்றி, ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் வேண்டும்.
அதற்கும் அரசு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதனை செய்வதாக தெரிவித்துள்ளோம். சில மருந்துகளை மத்தியில் இருந்து பெற்றுத்தர உதவி செய்வதாகவும் கூறியுள்ளோம். தற்போது இங்கு நடைபெற்ற கூட்டம் பொதுமக்களுக்கு ஜிப்மர் மூலம் இன்னும் அதிக சேவைகள் செய்ய வழிவகுக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஜிப்மரில் கரோனா நோயாளிகளுக்கு என்று தனிப்பிரிவு உள்ளது. இதில் 500 படுக்கைகள் உள்ளன. இன்னும் படுக்கைகள் விரிவுப்படுத்தப்படுகிறது.
மே 3-ம் தேதிக்கு பிறகு தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு எல்லாவற்றையும் கண்காணிக்க முடியாது. மக்கள் விழிப்புடனும், சுயக்கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்.
அலைக்கழிப்பு கூடாது
புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்துக்காக யாரும் அலையத் தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் அரசு மூலமாக மருந்து வழங்கப்படுகிறது. தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தைபரிந்துரை செய்பவர்களைக் கண்காணித்து மருத்துவத்துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்.கரோனா தொற்றுக்கு சிகிச்சைஅளிக்க அனுமதி பெற்ற மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை மருத்துவமனையின் மூலமே ஏற்பாடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை பெற வருபவர்களிடம் மருந்தை வாங்கிவரச் சொல்லி அலைக்கழிக்கக் கூடாது.
தணிக்கைக் குழு கண்காணிப்பு
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT