Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் :

நாமக்கல் மாவட்டம் மோளியப்பள்ளி ஊராட்சியில், 100 நாள் வேலைத்திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மோளியப்பள்ளி ஊராட்சியில், ஏரி புறம்போக்கு இடத்தில் மரங்களை நட்டு பராமரிப்பதற்காக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், பணிகளை யாருக்கும் கொடுக்காமல், போலியாக கணக்கு எழுதி முறைகேடு நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் சென்றுள்ளதால் அவர் நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மோளியபள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் குப்புசாமி கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் எந்த பணியும் வழங்காமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இருந்தது. ஆனால், பணிகள் நடந்ததாகவும், அதற்காக சம்பளம் வழங்கப்பட்டதாகவும் முறைகேடாக தொகை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x