Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
சேலம்: சேலத்தில் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர். நகர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதாக மாநகராட்சிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், கோபிநாத் தலைமையிலான அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டி மற்றும் சாலையோரங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சாலையோரம் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனையை கண்டறிந்து, மருத்துவமனைக்கு அறிவிப்பு செய்து ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்ய மாநகர நல அலுவலருக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT