Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
பெரம்பலூர்: கரோனா நிவாரண நிதியாக பெரம்பலூர் அரசுப்பள்ளி ஆசிரியை ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் நேற்று வழங்கினார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் 2-வது அலையால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் பைரவி (41) நேற்று முன்தினம் தனது மகன், மகளுடன் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப.வெங்கடபிரியாவை சந்தித்து, கரோனா நிவாரண நிதியாக தனது சொந்த பணத்திலிருந்து ரூ.50 ஆயிரம் நிதி வழங்குவதாகக் கூறி, அதற்கான காசோலையை வழங்கினார். காசோலையை பெற்றுக்கொண்ட ஆட்சியர், ஆசிரியை பைரவியை பாராட்டினார்.
ஆசிரியை பைரவி கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது, அவர் பணியாற்றும் எளம்பலூர் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த ஏழை மாணவ, மாணவிகள் 16 பேருக்கு ஆன்-லைனில் பாடங்கள் கற்பதற்கு வசதியாக ஸ்மார்ட் செல்போன்கள் வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT