Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் - பழமை மாறாமல் வர்ணம் பூசக் கோரி வழக்கு : அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பழமை மாறாமல் மூலிகை கலந்த வர்ணம் பூசக்கோரிய வழக்கில், அறநிலையத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கோபுரம், சுவர்கள் மற்றும் தூண்களில் தற்போது வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இந்த வர்ணம் தரமற்று இருப்பதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். பொதுவாக பழமையான கோயில்களில் பச்சிலை கலந்த வர்ணத்தைப் பூசுவது வழக்கம்.

அதற்கு மாறாக திருவட்டாறுஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வர்ணம் பூசப்படுவதால் கோயில் கோபுரம், தூண்கள், சுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

கோயில் கருவறை தரையில் கிரானைட் கல் பதிக்கிறார்கள். கோயிலில் ஐந்து நேரமும் எண்ணெய் பூஜை நடைபெறும் நிலையில் கிரானைட் கற்கள் பக்தர்கள் நடந்து செல்ல இடையூறாக இருக்கும்.

எனவே, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பழமையான முறையில் வர்ணம் பூசவும், கருவறையில் பழமை மாறாமல் தரைக் கற்களை பதிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரர் புகார் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x