Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

வைத்தீஸ்வரன்கோவிலில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது - வைத்தியநாத சுவாமி கோயில்மகா கும்பாபிஷேகம் :

வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலில், 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில், தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு செல்வ முத்துக்குமார சுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி 8 கால யாக சாலை பூஜை ஏப்.24-ல் தொடங்கி நடைபெற்று வந்தது. கோயிலில் உள்ள விநாயகர், ஆதி வைத்தியநாதர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நடராஜர் சன்னதிகளுக்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர், நான்கு ராஜகோபுரங்கள், கற்பக விநாயகர், வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி, அங்காரகன், மூலவர் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படியும், தமிழக அரசின் கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளுக்குட்பட்டும், விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இதையொட்டி வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கோயில் கும்பாபிஷேகத்தை கண்காணிக்க உயர் நீதிமன்றத்தால் ஐஏஎஸ் அதிகாரி விக்ராந்த்ராஜா, உயர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

விழாவில், தருமபுர ஆதீனம் 27-வது மடாதிபதி ல மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் லலிதா, இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக் குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x