Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் - செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க டெண்டர் : உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை,வெண்டிலேட்டர், ஆக்சிஜன் இருப்பு மற்றும் பற்றாக்குறை குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்தியை வைத்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘ரெம்டெசிவிர் விற்பனைக்கான மையங்களை மாநிலம் முழுவதும் கூடுதலாக திறக்க வேண்டும். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை பற்றி செய்தி வெளியாகி இருக்கிறது’’ என தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத் ஆஜராகி, ‘‘மக்கள் கூட்டமாக கூடுவதால் கரோனா பரவல் அதிகரிக்கிறது. எனவே, ரெம்டெசிவிர் விற்பனைக்கு நடமாடும் மையங்களை உருவாக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

ஓரிரு நாளில் அறிவிப்பு

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கூறும்போது, ‘‘ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கான கூடுதல் மையங்கள் அமைப்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்’’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜரானார். அவர் வாதிடும்போது, ‘‘தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.

நீதிபதிகள் கேள்வி

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘கடந்த 14 மாதங்களாக மத்தியஅரசு என்ன செய்து கொண்டிருந்தது? கரோனா 2-வது அலை தீவிரமாகியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருப்பதாக தற்போது கூறுகிறீர்கள். கரோனாவைத் தடுக்க நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று, திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கூறும்போது, ‘‘ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கான கூடுதல் மையங்கள் அமைப்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x