Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கரோனா பரிசோதனை :

திருச்சி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு ஜமால் முகமது கல்லூரியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கு சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியிலும், முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளுக்கு கண்ணனூர் இமயம் பொறியியல் கல்லூரியிலும், மணப்பாறை, ரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளுக்கு திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதனிடையே, வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள போலீஸார் ஆகிய அனைவரும், வாக்கு எண்ணிக்கை நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக கரோனா பரிசோதனை செய்து, கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x