Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் போடப்படுகிறது - முதல்முறையாக 1.50 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்கிறது தமிழக அரசு : கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட இருப்ப தால் 1.50 கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய் கிறது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஹைதராபாத்தில் செயல் பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் தயாராகியுள்ள இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத் தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதித்தது.

தடுப்பூசி போடும் பணி

இதன்படி, முதல்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. தனி யாரில் தடுப்பூசிக்கு ரூ.250 கட் டணம் நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.

தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடம் அச்சம் இருந்தது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவத் தொடங்கியதால் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தொடங்கினர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி நாடுமுழுவதும் 4 நாட்கள் தடுப்பூசி திருவிழாவும் நடைபெற்றது. இந்த நாட்களில் மட்டும் தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கோவாக்சின் தடுப்பூசியை முதல் தவணை போட்டு 4 வார இடைவெளியில் 2-ம் தவணையும் கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் தவணை போட்டு 6 வார இடைவெளியிலும் போடப்படுகிறது.

5000 மையங்கள்

தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்களின் எண் ணிக்கை பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியதால் சென்னை, செங் கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தடுப் பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, கோவாக்ஸின் தடுப் பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமி ழகத்துக்கு வழங்கிய 69.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகளில் 56 லட்சம் லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வீணா கியது போக, ஒரு வாரத்துக்கு தேவையான சுமார் 10 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வரும் மே 1-ம் தேதி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் சுகாதாரத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

கொள்முதல்

இதற்கிடையில், நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவிலேயே அனை வருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழகம். கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழக அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முதல்வர் பழனிசாமி உத்தரவின்பேரில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்ட தடுப்பூசி பணிகளை செயல்படுத்த அந்தந்த மாநில அரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x