Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM
தமிழக ஓசூர் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு இ-பாஸ் சோதனை மையத்தில் கர்நாடக மாநில வாகனங்கள் உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் இ-பாஸ் வைத்திருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இ - பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.
தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இருமாநில எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் பிரதான சோதனைச்சாவடி யாக ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி விளங்குகிறது. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்துக்குள் வருகின்றன. தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மார்ச் 10-ம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் இரண்டாம் முறையாக ஓசூர் ஜுஜுவாடியில் இ-பாஸ் சோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் நேற்று முதல் கர்நாடகா உட்பட அனைத்து வாகனங்களுக்கும் இ -பாஸ் முறை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ஜுஜுவாடி இ-பாஸ் சோதனை மைய அலுவலர் கூறுகையில், மார்ச் 10-ம் தேதி முதல் இயங்கி வரும் இந்த இ-பாஸ் சோதனைச்சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை பரிசோதித்த பின்னர் தமிழகத் துக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. கடந்த 27-ம் தேதி இரவு 9 மணி முதல் கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக எல்லையிலும் கரோனா விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் கர்நாடகா உள்ளிட்ட அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாத வெளி மாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
இச்சோதனைச் சாவடியில் மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனிடையே ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக தமிழகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT