Published : 29 Apr 2021 03:14 AM
Last Updated : 29 Apr 2021 03:14 AM

கரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் இன்றும், நாளையும் - வேட்பாளர்கள், முகவர்களுக்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் :

கரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் வேட்பாளர்கள், முகவர்களுக்காக இன்றும், நாளையும் (ஏப்.29, 30) கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கரோனா தொற்று பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த விளக்கக்கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் ஆட்சியர் பேசியது: கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள், கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தி இருக்கவேண்டும் அல்லது கரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

கரூர் கோட்டாட்சியர், குளித்தலை சார் ஆட்சியர், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராய புரம், கடவூர் வட்டாட்சியர் அலுவலகங்கள், அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், குளித்தலை அண்ணா சமுதாய மன்றம் ஆகிய 11 இடங்களில் வேட்பாளர்கள், முகவர்களுக்காக ஏப்.29, 30 (இன்றும், நாளையும்) ஆகிய இரு நாட்கள் காலை 10 மணிக்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பரிசோதனை மேற்கொள்வதற் காக முகவர்கள் பட்டியலை வழங்கும்போது 20 சதவீத நபர்களை கூடுதலாக தனி பட்டி யலாக வழங்க வேண்டும. பட்டி யலில் உள்ள கூடுதல் நபர்களுக் கும் சேர்த்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏனென்றால், கரோனா தொற்று இருப்பது கண்டறியப் படும் நபர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தகைய சூழலில் கூடுதலாக பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு தொற்று இல்லை என முடிவு வந்த நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷாஜகான், வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) பிரபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (கரூர்) என்.எஸ்.பாலசுப்பிரமணியன், (குளித்தலை) ஷே.ஷேக்அப்துல்ரகுமான், (அரவக்குறிச்சி) ஜி.தவச்செல்வம், (கிருஷ்ணராயபுரம்) கே.தட்சிணாமூர்த்தி மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x