Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

கரோனா தொற்று பரவலை தடுக்க - புதுச்சேரி போல தமிழகத்திலும் மதுக்கடைகளை மூட வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கரோனா பரவலை தடுக்க புதுச்சேரிபோல தமிழகத்திலும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, புதுச்சேரியில் மதுக்கடைகளை மூடுமாறு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நோய்த் தொற்றுக்கு மதுக்கடைகள் முக்கிய காரணமாக உள்ள நிலையில், அவற்றை மூடுவது மிகச்சிறந்த நடவடிக்கை.

புதுச்சேரி அரசை பொருத்தவரை மது வணிகம் மூலமாகத்தான் பெருமளவில் வருவாய் கிடைக்கிறது. மதுக்கடை வருமானம் இல்லாவிட்டால் அரசு நிர்வாகத்தை நடத்துவதே சவாலாக இருக்கும் என்றாலும்கூட, மதுக்கடைகளை மூடியிருப்பது துணிச்சலான நடவடிக்கை.

அதேபோன்ற நடவடிக்கை தமிழகத்திலும் எடுக்கப்பட வேண்டும். மதுக்கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

கரோனா பரவல் காலத்தில் மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. மதுஅருந்துவது மனிதனின் நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.அதனால் மது அருந்துபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. இந்த அறிவுரையைக்கூட மதிக்காமல் மதுக்கடைகளை தொடர்ந்து திறப்பது கரோனா மேலும் பரவுவதற்கே வழி வகுக்கும்.

ஏழை மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகக் குறைந்துவிட்ட சூழலில் மதுக்கடைகள் திறந்திருந்தால், ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு வேளை உணவுக்காக வைத்திருக்கும் பணத்தைக்கூட எடுத்து வந்து மது குடிப்பார்கள். எனவே, தமிழகத்திலும் மதுக்கடைகளை உடனே மூடுவதற்கு அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x