Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM
ஆந்திராவில் இருந்து பழனிக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சாவுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு லாரி ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலகுரு, சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா, ஐந்து போலீஸார் கொண்ட தனிப்படை அமைத்து கஞ்சா கடத்தலை பிடிக்க பழனி டிஎஸ்பி சிவா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து போலீஸார் சாலையில் செல்லும் லாரிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பழநி அருகே பருத்தி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் பருத்தி மூட்டைகளுக்கு இடையே பைகளில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. லாரியை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த தங்கவேல் (42). லாரியில் பயணித்த வினோத்ராஜ் (30) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், ஆந்திர மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு பருத்தி ஏற்றிச்சென்றபோது காக்கிநாடா அருகில் பழநியை சேர்ந்த விஜயானந்த் (42), சிரஞ்சீவி (36), ராஜ்குமார் (36) ஆகியோர் கஞ்சாவை லாரியில் கடத்தி வந்து பழநியில் ஒப்படைக்க இருந்தது தெரிய வந்தது. லாரியில் வந்த இருவர் மற்றும் தனியாக லாரியை பின்தொடர்ந்து காரில் வந்த பழநியை சேர்ந்த மூவர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். லாரியில் இருந்த 70 கிலோ கஞ்சா மற்றும் லாரி, கார் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT