Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM

குத்துச்சண்டை கடந்துவந்த பாதை :

உலகின் அதிகாரப்பூர்வமான முதல் குத்துச்சண்டை போட்டி, கிமு 688-ல் நடந்த ஒலிம்பிக்கில் நடைபெற்றதாக வரலாற்றுக் குறிப்புகள்கூறுகின்றன. ஆனால், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குத்துச்சண்டை போட்டிகள் தொடங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்போது இருப்பதுபோன்ற கிளவுஸ்களை அன்றைய காலகட்டத்தில் வீரர்கள் அணிந்ததில்லை. அதற்குப் பதிலாக மிருகங்களின் தோலினால் ஆன பட்டைகளை கைகளில் சுற்றிக்கொண்டோ, வெறும் கைகளாலோ குத்துச்சண்டை போட்டிகளில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோன்று ஆரம்ப காலகட்டங்களில், புள்ளிக் கணக்குகளில் வெற்றி - தோல்விகள் நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் யாராவது ஒருவர் இறக்கும் வரையிலோ, அல்லது கைகளை தூக்கிக்கொண்டு தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரையிலோ போட்டிகள் தொடர்ந்துள்ளன.

வீரர்கள் ரத்தம் சிந்திப் பெறும் வெற்றி என்பதால், கிரேக்க நாட்டினருக்கு அந்த விளையாட்டின் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்தினர் பயிற்சிக்காக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். பிற்காலத்தில் ரோமானியர்கள் குத்துச்சண்டைக்காகவே பிரத்யேக கையுறைகளை கண்டுபிடித்துள்ளனர்.

1681-ம் ஆண்டு முதல் 1698-ம் ஆண்டுவரை பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள ராயல் தியேட்டரில் நவீன குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது. ஆனால் இந்தப் போட்டிகளில் முறையான விதிகள் கடைபிடிக்கப்படவில்லை. வீரர்கள் கையுறைகளை அணியவில்லை. அத்துடன் எடை வாரியாகவும் வீரர்கள் பிரிக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும், யாருடனும் குத்துச்சண்டை போட்டியில் மோதலாம் என்ற நிலைதான் இருந்தது.

‘பிரிட்டிஷ் பக்லிஸ்ட்ஸ் புரொடக்டிவ் அசோசியேஷன்’ என்ற அமைப்பு, 1838-ம் ஆண்டில் குத்துச்சண்டை போட்டிகளுக்கென சில விதிகளை கட்டமைத்தது. இதன் அடிப்படையில் 1839-ம் ஆண்டு முதலாவது குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதன்பிறகு கால மாற்றத்துக்கு ஏற்ப போட்டிகளிலும் அவ்வப்போது விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x