Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

தி.மலை கிரிவல பாதையில் காவல் துறையினர் குவிப்பு : கிரிவலம் செல்லும் பக்தர்களை தடுக்க நடவடிக்கை

தி.மலை கிரிவலப் பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க காவல் துறையினர் நேற்று குவிக்கப்பட்டனர்.

தி.மலை அண்ணாமலையை, பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது சிவ பக்தர்களின் நம்பிக்கையாகும். அதனால்தான், 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தை, மோட்ச தீபம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத்தை போல் கூடுதல் சிறப்பை பெற்றது சித்ரா பவுர்ணமியாகும்.

இந்நிலையில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல, பக்தர்களுக்கு இரண்டாவது ஆண்டாக நேற்றும் தடை விதிக்கப் பட்டுள்ளது தொடர்ந்து, தடை விதிக்கப்பட்டு வந்தாலும், ஊரடங்கு தளர்வுகள் காரணமாக தடையை மீறி கடந்த 3 மாதங்களாக பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். காவல்துறையின ரும் பெரியளவில் தடுப்புகளை ஏற்படுத்தவில்லை.

கரோனா தொற்று 2-வது பரவல்தீவிரமடைந்துள்ளதால், கிரிவலம்செல்ல முயற்சிக்கும் பக்தர்களை தடுக்க, கிரிவலப் பாதையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 14 கி.மீ., தொலைவு உள்ள கிரிவலப் பாதையில், 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு உள்ளதால், பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், மாலையில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்கியதால் பக்தர்களின் வருகை தடைப்பட்டு போனது. இருப்பினும், கிரிவலம் செல்ல முயன்ற உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த சில பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில், சித்ரா பவுர்ண மியையொட்டி தி.மலை அண்ணாமலையார் கோயிலில் வழக்கமாக நடைபெறும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், அண்ணாமலையார் கோயில் உள்ளே சென்று வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x