Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கோயில்களில் வைத்து வழிபாடு செய்ய உருவார பொம்மைகள் தயார் நிலையில் உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அடுத்த நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டி கருப்பராயன் கோயில் மற்றும் குலதெய்வ கோயில்களில் மகா சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமியின்போது நேர்த்திக்கடனாக கால்நடைகளின் உருவபொம்மைகளை வழங்குவது வழக்கம்.
இன்று (ஏப்.26) சித்ரா பவுர்ணமி என்பதால் கடந்த சில நாட்களாக உருவார பொம்மைகள் தயாரிப்பில் சிங்காரம்பாளையம், பெரும்பதி, செட்டிக்காபாளையம் மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வந்தனர். களிமண்ணால் செய்யப்பட்ட எருது, காளை, கன்றுகள் போன்றவற்றின் உருவார பொம்மைகளுக்கு, வண்ணம் தீட்டும் பணிகளும் நிறைவடைந்தன.
பவுர்ணமி விழாவில் நேர்த்திக்கடனாக வழங்க பொம்மைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த உருவார பொம்மைகளை சித்ரா பவுர்ணமியன்றும், அடுத்துவரும் கோயில் திருவிழாக்களிலும் விற்பனை செய்வதற்கு கொண்டுசெல்ல உள்ளதாக, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT