Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

திருப்பத்தூரில் துணிகரம் - இரும்பு கடையில் ரூ.2 லட்சம் திருட்டு :

திருப்பத்தூரில் இரும்பு கடையில் ரூ.2 லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் நகர பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (30). இவர். திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சரத்குமார் (18) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சரத்குமார் மட்டும் கடையில் இருந்தார். அப்போது, அங்கு வந்த நபர் இரும்பு பொருட்கள் வேண்டும் என சரத்குமாரிடம் கூறியதாக தெரிகிறது.

பின்னர் அந்த நபர், சரத்குமாரி டம் 100 ரூபாய் கொடுத்து அருகேயுள்ள கடைக்கு சென்று தேநீர் வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார். இதையடுத்து, சரத்குமார் 10 நிமிடத்துக்கு பிறகு தேநீருடன் கடைக்கு வந்தபோது அந்த நபர் வெளியே வந்தார். அவரிடம் தேநீரை வழங்கியபோது, எனக்கு வேண்டாம், கடை உரிமையாளர் வந்தவுடன் நான் வருகிறேன் எனக்கூறிவிட்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டார்.

பின்னர், சிறிது நேரத்துக்கு பிறகு வினோத்குமார் கடைக்கு வந்தார். அப்போது கல்லா பெட்டி திறந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கல்லா பெட்டியில் இருந்த 2 லட்சம் ரூபாய் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து சரத்குமாரை விசாரித்தபோது, வாடிக்கையாளர் ஒருவர் கடைக்கு வந்தது குறித்து அவர் தெரிவித்தார். இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இரும்பு கடைக்கு வந்து பணத்தை திருடியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x