Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

டெல்லி கங்காராம் மருத்துவமனையில் - ஆக்சிஜன் தட்டுப்பாட்டால்25 பேர் பரிதாப உயிரிழப்பு :

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையேமாநிலங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்துமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் 510 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்துவந்துள்ளது. இதனிடையே நேற்று காலை வரை அங்கு 25 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “நேற்று முதலே மருத்துவமனையில் பிரச்சினை இருந்து வருகிறது. இன்று காலை 8 மணிக்கு ஆக்சிஜன் தடுப்பாடு இருப்பதை அரசிடம்தெரிவித்துவிட்டோம். இங்குள்ள வெண்டிலேட்டர்கள் சரிவர செயல்பட முடிவதில்லை என்பதையும் தெரிவித்துவிட்டோம்.

காலை 9.20 மணிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் டேங்க் முழுவதும் காலியாகிவிட்டது. தட்டுப்பாடு காரணமாக 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

60 பேரின் உடல்நிலை மோசம்

மேலும் 60 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவர்களுக்கு ஆக்சிஜன் உடனடியாகத் தேவை.அவர்களை வேறு மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்" என்றார். இதனிடையே குறைந்த அழுத்த ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டதால் அவர்கள் 25 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லியிலுள்ள மேக்ஸ் ஸ்மார்ட் மருத்துவமனை, மேக்ஸ்ஹாஸ்பிடல் சாக்கெட் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x