Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

மகாராஷ்டிரா மருத்துவமனையில் தீ விபத்து கரோனா நோயாளிகள் 14 பேர் உயிரிழப்பு :

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் என்ற இடத்தில் விஜய் வல்லப் மருத்துவமனை உள்ளது. 4 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையின் 2-வது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 17 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. நோயாளிகள், ஊழியர்கள் உறக்கத் தில் இருந்ததால் தீபிடித்தது அவர்களுக்கு தெரிய வில்லை. தீ மளமளவென வேகமாகப் பரவியது. இதில் கரோனா நோயாளிகள் 14 பேர் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து 3 தீயணைப்பு வண்டிகள் அங்கு வந்து அதிகாலை 5.20 மணிக்கு தீயை முழுவதுமாக அணைத்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மற்ற நோயாளிகள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் இரங்கல்

விரார் மருத்துவமனையில் நோயாளிகள் இறந்த சம்பவம் துயரமானது என்று பிரதமர் மோடி தெரிவித் துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுவதாகவும் கூறியுள் ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

நாசிக்கில் உள்ள மருத்துவ மனையில் 3 நாட்களுக்கு முன் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் கரோனா நோயாளிகள் 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விரார் மருத்துவமனை 14 நோயாளிகள் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைகளில் விபத்துகள் நடப்பதை தடுக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x