Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

பின்னணி பாடகி மகளுக்கு பாலியல் வன்கொடுமை - தலைமறைவாக இருந்த கிறிஸ்தவ மதபோதகர் உட்பட 4 பேர் கைது :

பின்னணி பாடகி மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கிறிஸ்தவ மத போதகர் உட்பட 4 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஒருவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார். இவர், சென்னை கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், ‘எனது 15 வயது மகளிடம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள எனது தங்கை குடும்பத்தினர், கீழ்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ மதபோதகர் உள்ளிட்டோர் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சிறுமிக்கு கிறிஸ்தவ பாதிரியார் உட்பட 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும், அதற்கு சிறுமியின் சித்தி உடந்தையாக இருந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஹென்றி, சிறுமியின் சித்தி, சித்தியின் கணவர், அவர்களது உறவினர் மகன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காவல் துறையினரின் விசாரணையில், ‘கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பாடகி தனது மகளை சாலிகிராமத்தில் உள்ள தங்கை வீட்டில் விட்டு விட்டு சினிமா, டிவி நிகழ்ச்சிகளுக்காக சென்றதை பயன்படுத்தி சிறுமி தனியாக இருக்கும்போது பாடகியின் தங்கை கணவர், தங்கை கணவரின் சகோதரி மகன் ஆகியோர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிந்தது.

மேலும், கீழ்பாக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஹென்றியும் பாலியல் தொந்தரவு கொடுத் துள்ளது தெரிய வந்தது. இந்த விவகாரம் பாடகியின் தங்கைக்கும் தெரிந்துள்ளது. ஆனால், அவர் பாதிரியாருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்’ என்பது தெரிய வந்தது.

இதையடுத்து புகாருக்குள்ளான 4 பேரும் தலைமறைவாகினர். அவர் களை, தனிப்படை காவல் துறையினர் தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் சென்று தேடினர். இந்நிலையில், திண்டிவனத்தில் பதுங்கி இருந்த கிறிஸ்தவ மதபோதகர் ஹென்றி, சிறுமியின் சித்தி, சித்தியின் கணவர், உறவினர் மகன் ஆகிய 4 பேரை தனிப்படை காவல் துறையினர் திண்டிவனத்தில் வைத்து நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x