Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் (34) கரோனா தொற்றால் காலமானார்.
பத்திரிகையாளரான ஆசிஷ், டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 5.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த சீதாராம் யெச்சூரி, “கரோனா தொற்றுக்கு எனது மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரியை இழந்துவிட்டேன். எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் எங்களுக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு வெளியிட்டுள்ள செய்தியில், "சீதாராம், அவரது மனைவி இந்திராணி, ஆசிஷின் மனைவி ஸ்வாதி, சகோதரி அகிலா மற்றும் பிற குடும்ப உறுப்பினர்ளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மேற்கு வங்க முதல்வர் மம்தா, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷின் துயர மற்றும் அகால மறைவுக்கு, யெச்சூரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஏ.கே. வாலியா மரணம்
காங்கிரஸ் மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் அமைச்சருமான ஏ.கே.வாலியா (72), கரோனா தொற்றால் காலமானார்.
லட்சுமி நகர் தொகுதியின் 4 முறை எம்எல்ஏவான அவர், டெல்லி தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதி காலை உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT