Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை :

இதுகுறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியதாவது:

தமிழக அரசு பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22-ம்தேதிமுதல் கோடை விடுமுறை விடுவது வழக்கமாகும். கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மேலும் உயரக்கூடும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் மாணவர்களே இல்லாத பள்ளிக்கு ஆசிரியர்களை வரச் சொல்வது வேதனையாக இருக்கிறது.

மேலும், பள்ளியில் செய்ய வேண்டிய இதர வேலைகளை ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே செய்யச் சொல்லி ஆணையிடலாம். தினமும் பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பேருந்துகளில்தான் பயணித்து ஒருவித அச்சத்துடனே தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.

பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்து பள்ளிக்கு சென்று வரும் ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் இருக்கவும், ஆசிரியர்களின் குடும்பங்களில் தொற்று பரவாமல் இருக்கவும் உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கும் இவ்வாண்டின் கடைசி வேலை நாளாக 24.4.2021 என அறிவித்து, கோடை விடுமுறையை தொடங்கும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x